தொழிலாளர் எழுச்சி குரல்களின் எதிரொலிகள் | கண்டி சீமை | இரா.சடகோபன்

Tuesday 18 October 2022
00:00
08:29

அரசாங்கத்தினதும் துரைமார்களதும் தொழிலாளர் விரோத நடத்தைகள், சட்டங்கள், கொள்கைகள் தொடர்பிலான சேர் பொன். அருணாசலத்தின் கண்டன நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து எரிச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தன. அதன் காரணமாக பல அரச உயர் அதிகாரிகள் சேர். பொன். அருணாசலம் அரசின் சுமுகமான நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுகின்றார் என்று காலனித்துவ செயலாளருக்கு புகார் கடிதங்கள் வாயிலாக அறிவித்தனர்.

இக்காலத்தில் சமூக சேவை லீக் என்ற அமைப்பை அதன் போதாமை கருதி கலைத்து விட்டு,  மேலும் பரவலாக செயற்படும் பொருட்டு ஏனையோருடன் சேர்ந்து இலங்கைத் தொழிலாளர் நலன்புரி  லீக்  (Ceylon Labour Welfare League)  என்ற அமைப்பை அருணாசலம் தோற்றுவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் நலன்புரி  லீக்   தனது விரிவான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது. அவ்வமைப்பு இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினதும் உரிமைகளைப் பாதுகாப்பதும்,  அவர்களின் சமூக, கைத்தொழில் அந்தஸ்தினை உயர்த்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டிருந்தது. அதன் பொருட்டு அதன் பெயர் "சிலோன் தொழிலாளர் கூட்டமைப்பு"  (Ceylon  Workers  Federation)  என்று மாற்றப்பட்டது.

இக்காலத்தில் பிரித்தானியாவில் அதிக அளவில்  பேசப்பட்ட விடயங்கள் சுய விடுதலை, சுய அபிவிருத்தி,  சுயநிர்ணய உரிமை,  அரசியல் அமைப்பில் ஜனநாயகப் பண்புகளை  அதிகரித்தல், தொழிலாளர்களின் கல்வி அறிவை அதிகரித்தல், அவர்களை ஸ்தாபனப்படுத்துதல் முதலியன போன்றனவே. இவை இலங்கையிலும் அரசியல் தலைவர்களின் மேடைப்பேச்சுகளாக இருந்தன. அருணாசலம் இந்தியத் தொழிலாளரை அதிகம் பாதித்த தொழில் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த குற்றவியல் தண்டனை ஏற்பாடுகள்,  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மிகக்  குறைந்த கூலி, 12  வயதுக்கும் குறைந்த சிறுவர் ,சிறுமியரை வேலைக்கு அமர்த்துதல்,  அவர்களையும் கூட கைது செய்து சிறையில் அடைத்தல் போன்றவற்றை தனது ஆர்ப்பாட்டங்கள்,  மேடைப் பேச்சுகளுக்கு கருப்பொருளாக ஆக்கிக் கொண்டார்.

1922 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அருணாசலத்தை தலைவராகக் கொண்டு இயங்கிய  "இலங்கை தேசிய காங்கிரஸின்" போராட்டத்தின் விளைவாக முதல் முறையாக தேர்தல் முறையில் உருவாக்கப்பட்ட  "சட்டசபை" ஸ்தாபிக்கப்பட்டது. இவரது போராட்டங்களும், பின்னர் 1922 ஆம் ஆண்டு ஏ. ஈ. குணசிங்க தலைமையிலான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுமே 1865 ஆம் ஆண்டின் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த குற்றவியல் பிரிவுகளை நீக்க காரணமாக அமைந்தன. சேர்  பொன். அருணாசலம் தன் இறுதி மூச்சு நிற்கும் வரை தொழிலாளர் வர்க்க நலனுக்காகப் போராடினார்.

இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் இலங்கையை நோக்கிய குடிப்பெயர்வில் 1890 முதல் 1940 ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலம் மிக முக்கியமானதாகும். இக்காலத்திலேயே இவர்கள்  மிக அதிக அளவில் புலம் பெயர்ந்தனர்.  இதே காலத்தில்தான் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய தேசிய எழுச்சிப் போராட்டங்கள் மிக வலுவாகத் தொடுக்கப்பட்டிருந்தன.

More ways to listen