மெய்யியல் மரபு : ஆசீவகம்| இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள் | முனைவர் ஜெ. அரங்கராஜ்
இலங்கையும் தெற்காசியாவும் ஒருங்கிணைத்த பண்பாட்டு மண்டலமாகப் பெருங் கற்காலத்திற்கு முன்பிருந்தே விளங்கிவரும் நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பு மொழியாலும் நாகரிகத்தாலும் சமயங்களாலும் மெய்யியற் சிந்தனைகளாலும் ஒன்றனுக்கொன்று தொடர்பும் இணைப்பும் ஒத்தத்தன்மையும் கொண்டனவாக அமைகின்றன. மொழிநிலையில் தொல்காப்பியத்திற்கு முற்பட்டும் பிற்பட்டும் அதன் விதிகளுக்கு உட்பட்டனவாகவே ஈழமும் தமிழகமும் அமைகின்றன. சிங்கள மொழியின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் தமிழின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது. அதனையொத்த தன்மையினையே சமயப்பண்பாட்டு நிலையிலும் காணவியலும். மெய்யியல் கோட்பாடுகளின் தோற்றமும் பரவலும் தமிழகத்திலும் ஈழத்திலும் ஒத்த தன்மையுடையனகவே அமைந்திருந்தன. எல்லாவற்றினுக்கும் மேலாக அரசியற் கட்டமைவுகளுக்கு அப்பாற்பட்டுச் சான்றோர்களாலும் மக்களாலும் தமிழ்நாடுகளுள் ஒன்றாகவே ஈழமும் கருதப்பட்டது. இதனைச் சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்த தொல்காப்பியச் சேனாவரையர் உரை நூலின் வெளியீட்டு விளம்பரத்தாலும் உ.வே. சாமிநாதையரின் முன்னுரை குறிப்புகளாலும் அறியலாம். இவ்வொப்புமைகளின் அடிப்படையிலேயே பண்டைய தமிழரின் மெய்யியல் மரபுகளையும் தொன்மை வழிபாட்டுக் கூறுபாடுகளையும் ஆராய வேண்டியதாகின்றது.