நமது வியர்வையில் தான் இந்த நாடு கட்டி எழுப்பப்படுகிறது | கண்டி சீமை | இரா.சடகோபன்
இலங்கைத் திருநாட்டை ஒரு சடுதியான வளர்ச்சிக்கு உட்படுத்தி ஒரு நவீன பொருளாதாரமாக மாற்றி அமைத்தவர்கள் பின்னர் வந்தேறு குடிகள் என்று கொச்சையாக அழைக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தான். இந்த நாட்டின் முதல் நவீன பொருளாதாரமான கோப்பிக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தொழில் புரிவதற்காக முதன் முதலாக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். ஆனால் இலட்சக்கணக்கான ஏக்கரில் கோப்பியைப் பயிரிட்டுவிட்டு அதனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி எழுந்த போதுதான் அதனை எங்கெல்லாம் ஏற்றுமதி செய்யலாம் என்று பலமாக யோசித்தனர். அவர்களின் முதல் இலக்கு அவர்தம் முதல் தாயகமான இங்கிலாந்து தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் இங்கிலாந்தை மட்டும் தமது சந்தை நாடாகக் கொண்டால் இலங்கைப் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தமது ஏனைய காலனித்துவ நாடுகளையும் ஏற்றுமதி இலக்கு நாடுகளாகக் குறிவைத்து திட்டமிட்டனர்.