ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் - பகுதி 1 | சி. பத்மநாதன்
மோரியரின் தலைநகரான பாடலிபுரத்திலே மொக்கலிபுத்த தீஸரின் தலைமையிற் கூடிய மூன்றாம் பௌத்த மாநாட்டிலே பௌத்த சமயத்தைப் பரதகண்டத்திலும் அதற்கப்பாலுள்ள தேசங்களிலும் பரப்புவதற்கெனக் குழுக்களை அனுப்புவதற்குத் தீர்மானித்தார்கள்.
அதன்படி மகிந்த தேரரின் தலைமையிலான குழு இலங்கைக்குச் சென்றது. அங்குள்ள அரசனாகிய தேவநம்பிய திஸனின் ஆதரவோடு அரண்மனையின் அருகிலுள்ள வனத்தில் மகாவிகாரை அமைக்கப்பட்டது.
காவல் தெய்வங்கள் நால்வரை வழிபடும் மரபு இலங்கையில் 14 ஆம் நூற்றாண்டு முதல் வழமையாகிவிட்டது. உபுல்வன், சமன், விபீஷணன் கந்தகுமாரன் ஆகிய நால்வரையும் அவ்வாறான தேவர்களாகக் கொண்டனர் என்பதை லங்காதிலகத்து கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது.
அங்குள்ள கட்டுமானத்தில், மூலவராகப் புத்தர் பெருமானையும் அதன் வெளிப்புறச் சுவர்களை முன்றில்களான கோட்டங்களாக அமைத்து அவற்றிலே காவல் புரியும் தேவர்களில் மூவரின் பிரதிமைகளைத் தாபனம் பண்ணியுள்ளனர்.
இலங்கையில் கிமு. மூன்றாம் நூற்றாண்டில் மஹிந்த தேரர் உருவாக்கிய மகாவிரை தேரவாதத்தின் நிலைக்களனாக நிலைபெற்றது. ஆதியான பௌத்த பாரம்பரியங்களும் இலக்கிய மரபுகளும் மகாவிகாரையினாற் பேணப்பட்டன.
வட்டகாமனி அபையன் (கிமு.89-77) அபையகிரி விகாரத்தை அமைத்து, வழமைக்கு மாறாக அதனை திஸ்ஸதேரருக்கு வழங்கினான். அரசன் படையெடுப்பொன்றின் காரணமாகப் பதவியிழந்திருந்த காலத்திலே திஸ்ஸதேரர் ஆதரவு புரிந்தமையால் அதற்கான நன்றிக்கடனாக அவரிடம் விகாரையினை வழங்கினான்.